அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதியிலுள்ள சில
அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும்
காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வேயின் பிரதித்
தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுடன் நேற்று(27.05.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடம் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
மாற்றுத் திட்டங்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
கடல் நீரைச் சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக
குடிதண்ணீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான செலவு
அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், மாற்றுத் திட்டங்கள் தொடர்பில்
கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறி வரும்
நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லை என்றும், இதன் காரணமாகப் பல
சவால்களை எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப்
பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும், அவற்றை
முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர்
இங்கு வலியுறுத்தியுள்ளார்.



