யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகைக் குருதிக்கும் பெரும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் இது தொடர்பில்
விடுத்துள்ள அறிக்கையில்,
குருதிக்கும் தட்டுப்பாடு
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக ‘ஓ பொஷிடிவ்’ குருதிக்குத்
தட்டுப்பாடு நிலவிய நிலையில், தற்போது அனைத்து வகைக் குருதிக்கும்
தட்டுப்பாட்டையும் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளோம்.

குருதி வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 226
பைந்த் குருதியே இருப்பில் இருக்கின்றது. தினமும் 35 – 40 பை குருதி எமது
இரத்த வங்கியால் நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
தற்போது விபத்துக்கள், சத்திர சிகிச்சைகள் அதிகரித்துச் செல்வதால் குருதியின்
தேவை தினமும் அதிகரித்துச் செல்கின்றது. குருதிக்கொடை முகாம்கள் மூலம் குருதி
சேகரிக்கப்பட்டாலும் அதுவும் பற்றாக்குறையாகவே இருக்கின்றது.
எனவே, குருதிக்கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின்
பின்பக்க நுழைவாயிலின் ஊடாகத் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை
வருகை தந்து குருதிக் கொடை செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு
வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்”என்றுள்ளது.

