கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் வாழ்த்து செய்தியில், யேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமூகத்திற்கு அன்பு, தியாகம், மன்னிப்பு
மற்றும் ஒற்றுமையின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டியதாக அமைச்சர்
குறிப்பிட்டார்.
அந்த தெய்வீகப் பிறப்பு, மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன்
வாழவும், வேறுபாடுகளை மதித்து சமாதானமாக இணைந்து செயல்படவும் வழிகாட்டும் ஒரு
நிரந்தர ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மகத்தான திருநாளை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ
சகோதரர் சகோதரிகளுக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கிறிஸ்துமஸ் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும்
அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை விதைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சமூக பொறுப்பு
மேலும், இன்றைய சமூக மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், கிறிஸ்துமஸ்
எடுத்துச் சொல்லும் மனிதநேய மதிப்புகள் மிகவும் அவசியமானவை என அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.

பரஸ்பர புரிதல், சகோதரத்துவ உணர்வு மற்றும் சமூக பொறுப்பு
ஆகியவை வலுப்பெறும்போது மட்டுமே நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இலங்கை மக்களும் ஒரே
தேசமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருநாள் வழங்கும்
பிரதான செய்தி எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஒற்றுமை உணர்வே நாட்டின் அமைதி,
அபிவிருத்தி மற்றும் எதிர்கால வளத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும்
தெரிவித்தார்.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, புதிய நம்பிக்கையுடனும், புதுப்பித்த
உற்சாகத்துடனும் அனைவரையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் மனிதநேயமும் கருணையும்
வேரூன்ற உதவ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், ஒற்றுமை, சமாதானம்
மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளுடன் புதிய ஆண்டை எதிர்கொள்ள அனைவரையும்
அழைத்துள்ளார்.

