“நாட்டில் வெறும் பாடல் பாடியதற்காக யாரும் கைது செய்யப்படுவதில்லை. விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ.) அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான வார்த்தைகளைச் சமூக ஊடகங்கள் ஊடாகப் பகிர்ந்த காரணத்தினாலேயே கிளிநொச்சி இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்டில் இன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் தான் உள்ளது. எனினும், இந்த இளைஞருக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு (Detention Order) பிறப்பிக்கப்படவில்லை; ஆகவே, நீதிமன்றத்தை நாடி அவர் பிணை பெற்றுக்கொள்ள முடியும்,” என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(09) இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
“பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இந்த அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேடையில் பாடல் பாடியதற்காகவே தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறான கருத்தாகும். அந்த இளைஞர் மேடையில் பாடல் பாடியதற்காகக் கைது செய்யப்படவில்லை. குறித்த பாடலைப் பாடி, அதனை விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான 2011ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரமே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது வடக்குக்கும் தெற்குக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. தமிழ், முஸ்லிம் என்பதால் சட்டம் ஒரு விதமாகவும், சிங்களம் என்பதால் சட்டம் வேறு விதமாகவும் இங்கு பிரயோகிக்கப்படவில்லை. பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் எவரும் சட்டத்திற்கு முரணான வகையில் செயற்படக் கூடாது.
அடுத்ததாக, நீதிபதி அலெக்ஸ் ராஜா அவர்களின் இடமாற்றம் தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். நீதிபதிகளின் இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றில் நிறைவேற்று அதிகாரமோ அல்லது அரசாங்கமோ எவ்விதத்திலும் தலையிடுவதில்லை. அரசியலமைப்பின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுயாதீன நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாகவே அப்பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால அரசாங்கங்கள் அரசியல் தலையீடுகளுடன் நீதிபதிகளை இடமாற்றம் செய்திருக்கலாம். ஆனால், நமது அரசாங்கம் ஒருபோதும் அவ்வாறு செய்யப்போவதில்லை. இது குறித்து எவருக்கேனும் ஆட்சேபனைகள் காணப்பட்டால், அவர்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவை நாடி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்,” என்றார்.

