ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 08 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 22 வயதுடைய குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
கடந்த 3ஆம் திகதி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நளின் பண்டார பயணித்த வாகனம் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) மாற்றப்பட்டார்.
காவல்துறையினரால் கைது
இந்த நிலையில் இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த வாகனத்தின் சாரதியை நிட்டம்புவ போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Source: https://ibctamil.com/article/mp-nalin-bandara-vehicle-collided-youth-killed-1718166181

