மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை
(20.10.2025) இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.
ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான
குருக்கள் சிவஸ்ரீ சற்குண சன்மதுரன் குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய
வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும்
இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட
வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில்
ஈடுபட்டு, உறவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக
கொண்டாடினர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தீபாவளி வழிபாடு
தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை
வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றன.


குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய தீபாவளி வழிபாடு
கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன்
ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை(20.10.2025) நடைபெற்றது.
கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு
குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் திகழ்கின்றது.
இதன்போது தீபாவளி விசேட
பூஜையை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஆலய மூல மூர்த்தியாகிய கிருஷ்ண பெருமானுக்கும், ஏனைய பரிபாரத்
தெய்வங்களுக்கும் இடம்பெற்ற விசேட பூஜை அபிஷேகம் இடம்பெற்றது. இதன்போது
அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனில் கொண்டாட்டம்
தீபத்திருநாளாம் தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஆலயங்களில் விசேட பூஜை
வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசனில் இன்றைய தினம் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளில் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாதாந்த
சஞ்சிகையின் ஆசிரியரும், ராமகிருஷ்ண மடத்தின் துறவியுமான ஸ்ரீமத் சுவாமி
அபவர்கானந்தஜி மஹராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதேபோன்று இன்றைய தினம் இலங்கை சாரணர் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
“சாரணர் வாரம் 2025” இன்று (20.10.2025) நாடு முழுவதும் வெகு விமரிசையாக
ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தீபத்திருநாளை முன்னிட்டும் சாரணிய மாணவர்கள்
கலந்துகொண்ட வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பில், இந்நிகழ்வு மாவட்ட சாரணர் தலைவர் ரி.ருத்தரகரன் அவர்களின்
ஒருங்கிணைப்பில், கல்லடி உப்போடையில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிசன் மற்றும்
மாணவரில்லத்தில் அமைந்துள்ள இராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில் வளாகங்களில்
சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் உதவி மாவட்ட ஆணையாளர் (நிர்வாகம்) அ.நிசாந்தன், உதவி மாவட்ட
ஆணையாளர் (மட்டக்களப்பு நகர்) எம்.சந்திரசுசர்மன், உதவி மாவட்ட ஆணையாளர்
(பட்டிருப்பு) என்.பிரதீபன் ஆகியோருடன் மாவட்ட சாரணத் தலைவர்களும் சாரணத்
தலைவர்களும், மேலும் 150-க்கும் மேற்பட்ட சாரணர்கள் மற்றும் பெற்றோர்கள்
கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விசேட வழிபாடுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான நற்சிந்தனைகளும்
வழங்கப்பட்டதுடன் ஆசியும் வழங்கப்பட்டு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு வழிபாடு
தீபாவளி பண்டிகையையொட்டி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால்
ரத்னசேகர, திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வர மத சடங்குகளில்
இன்று(20) பங்கேற்றார்.
பின்னர், கோவிலின் குறைபாடுகள் குறித்து கோவில் நிர்வாகத்தினருடன்
கலந்துரையாடினார்,.
ஒரு சிறிய ஆய்வு மேற்பார்வை நடத்தியதுடன் தேவையான பணிகளை
மேற்கொள்ள எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்தும்
கலந்துரையாடினார்.

திருக்கேதீஸ்வர ஆலய தீபாவளி விசேட பூசை
மன்னார் மாவட்ட இந்து மக்கள் சமய வழி பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து
இன்றைய தினம் திங்கட்கிழமை (20) தீபாவளி பண்டிகையை வெகுவிமர்சியாக
கொண்டாடினார்கள்.
அதற்கமைவாக தீபாவளி விசேட பூசை இன்று திங்கட்கிழமை (20) காலை மன்னார்
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் குறித்த பூஜை
இடம்பெற்றது.
இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில்
ஈடுபட்டனர்.இதேவேளை மாவட்டத்தின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தீபாவளி விசேட
பூஜைகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.




















Source: https://tamilwin.com/article/diwali-celebreation-sri-lanka-1760954056

