நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்காக, வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் எனவும், அவர் ஜனாதிபதி செயலகம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை பிரிவில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இவர் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
விசாரணைகளின்படி, இவர் முன்னதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரக பிரிவில் பிரதிக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய காலத்திலேயே இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை, குற்றவியல், போக்குவரத்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவுகளின் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

