சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயற்சிக்கப்பட்ட சுமார் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீன பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் அமைந்துள்ள “பசுமை வழி” (Green Channel) ஊடாக சுங்க பரிசோதனைகளைத் தவிர்த்து வெளியேற முயன்றபோதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 35 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
அவர்கள் கொண்டுவரப்பட்ட ஆறு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைத்துள்ளனர்.
Source: https://samugammedia.com/foreign-cigarettes-seized-in-katunayake–chinese-traders-arrested-1782882651

