நள்ளிரவு நேரம் மோட்டார் வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் தூங்கியதால் இளைஞன் உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்புடுத்தியுள்ளது.
இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிகிச்சை அளிக்காமல் தூங்கிய மருத்துவர்
நள்ளிரவு நேரம் ஹோட்டலுக்குச் சென்றபோது சுனில் என்ற இளைஞர் மோட்டார் வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை இரவு 12.30 மணிக்கு லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், சிகிச்சை அளிக்காமல் நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்ததாக சுனிலின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காலை 8 மணிக்கு சுனில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், தூங்கிக் கொண்டிருந்த மருத்துவரின் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள்
இந்நிலையில், சம்பவத்தைக் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் ஞானேஷ்வர் டோங்க் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில், ஜூனியர் மருத்துவர்கள் பூபேஷ் மற்றும் அனிகேத் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/young-man-life-doctor-slept-without-treating-him-1753785772

