காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை வீச முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்வதற்காக காலி தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் சிறப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி சிறைச்சாலையின் பின்புறம் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் இருந்து சிறைச்சாலைக்குள் பொதியொன்றை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவர் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சந்தேகநபர்கள் வீசியதாக கூறப்படும் பொதியை பொலிஸார் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.
அதில் 2,180 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், புகையிலை மற்றும் 49 லைட்டர்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொதியானது சிறைக்குள் உள்ள கைதிகளை இலக்காகக் கொண்டு சிறைச்சுவர் வழியாக வீசுவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

