சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினை குறித்த வழக்குகள் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Dr Archuna) உத்தியோகபூர்வமான சட்டத்தரணியாக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் (Celestine Stanislaus) தனது தனிப்பட்ட முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வழக்குகள்
அதில், வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படும் வரை சட்டச் சேவை தொடர்ந்தும் செய்யப்படும் என குறித்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மக்களின் குறிப்பாக தென்மராட்சி மக்களின் அடிப்படை தேவையான மருத்துவம் சுகாதாரத்துடன் வைத்தியர் அர்ச்சுனாவின் விவகாரம் மிக இறுக்கமான தொடர்பை கொண்டுள்ளமையால் இவ்வழக்குகள் மிகுந்த அவதானத்துடன் கையாளப்படும் என்றும் சட்டத்தரணி செலஸ்டின் ஸ்டானிஸ்லாஸ் குறிபிட்டுள்ளார்.
குறித்த பதிவில் இறுதியாக “மக்களுடன் இணைந்து வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்” என சட்டத்தரணி கூறியுள்ளார்.
சட்டத்தரணிகளின் உதவி
இந்த நிலையில், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, வைத்தியர் அர்ச்சுனா, தனது முகப்புத்தக கணக்கில், “மனிதாபிமானம் உள்ள சட்ட நிபுணர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து உதவி செய்யவும், “என் மீது ஐந்து வழக்குகள் போடப்பட்டுள்ளன.சட்டம் தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யவும்” என பதிவொன்றை இட்டு சட்டத்தரணிகளின் உதவியை நாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/doctor-archuna-s-official-lawyer-1721658334?itm_source=parsely-popular

