அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கப் பிரிவிற்கு(ICE) அகதிகள் மறுவாழ்வு அலுவலகம் (ORR) பகிர்ந்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில், 12,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரும் அவர்களது குழந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்ட பிரத்யேக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க எல்லையைத் தனியாகக் கடக்கும் சிறுவர்களைப் பராமரித்து, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ORR மேற்கொண்டு வருகிறது.
சிறுவர் பராமரிமரிப்பு
கடந்த காலங்களில், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் தகவல்கள்
குடிவரவுச் சட்ட நடைமுறையாக்கப் பிரிவினரிடமிருந்து தனித்து வைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், ஜனவரி 2025 முதல், ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் அவர்தம்
குடும்பத்தினர் தொடர்பான 4,60,000-க்கும் மேற்பட்ட குறிப்புகளை ORR அமைப்பு
ICE-க்கு வழங்கியுள்ளது.
இந்தக் கொள்கை மாற்றத்தின் காரணமாக, குழந்தைகளைத் தங்களோடு சேர்க்க முனையும்
பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பலர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை
மேலும், கடுமையான கைரேகை மற்றும் பின்னணிப் பரிசோதனைகள் காரணமாக, சிறுவர்கள்
அரசுப் பராமரிப்பு மையங்களில் தங்கியிருக்கும் சராசரிக் காலம் 30 நாட்களில்
இருந்து 194 நாட்களாகப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கும் சிறுவர்களை மீட்டெடுக்கவே இத்தகைய கூடுதல்
சோதனைகள் நடத்தப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தரப்பில்
விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்றபோதிலும், குழந்தைகள் நலத் திட்டத்தை அரசாங்கம்
நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்காக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மனித உரிமை
வழக்கறிஞர்களும், முன்னாள் அதிகாரிகளும் கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/thousands-children-and-guardian-arrested-in-the-us-1785253425

