ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் அதிகரிப்பதன் மூலம் மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
‘மகத்தான தேசம் மற்றும் தலைமுறைக்காக முன்னிற்போம்’ என்ற தலைப்பில் கேகாலையில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பிரதம நீதியரசரை தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்றும், சட்டத்தரணிகளின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு தாம் முழுமையாக உடன்படுவதாகக் குறிப்பிட்டார்.
இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக்குப் பின்னர் சுமார் 45 வயதில் ஓய்வுபெற வேண்டிய நிலை காணப்படுவதாகவும், அந்த வயதில் அவர்கள் பல்வேறு குடும்ப மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, அந்த வயதில் அவர்களின் பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக வேறு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதும் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதில் ஓய்வுபெறுவதுடன், அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும் சந்தர்ப்பத்திலும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் அதிகரித்தால் மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்றும், மனிதர்களால் நீண்ட காலம் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமது உடல் மற்றும் மூளை சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது மீண்டும் இராணுவப் பொறுப்பு வழங்கப்பட்டாலும் அதனைச் சிறப்பாக வழிநடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 வயது வரையிலும் இராணுவத் தளபதிகள் பணியாற்றுவதாகவும், சில நாடுகளில் நீதிபதிகள் 70 வயதில் ஓய்வுபெறுவதாகவும் சுட்டிக்காட்டிய சரத் பொன்சேகா, இலங்கையில் மட்டும் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதில் ஏன் தயக்கம் காணப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

