லெபனானின்(lebanon) தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய(israel) விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின்(Hezbollah) உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில்(Ibrahim Aqil) கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் மற்றும் AFP செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தஹ்சின் என்று அழைக்கப்படும் அகில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உறுதிப்படுத்திய இஸ்ரேல் இராணுவ பேச்சாளர்
இதேவேளை இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, பெய்ரூட்டில் நடத்திய வான்வழித் தாக்குதலில் இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் பிரிவின் மற்ற உயர்மட்ட உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
1983 ஆம் ஆண்டில், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஒரு கடல் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குழுவில் அவர் உறுப்பினராக இருந்தார்.
இந்த தாக்குதல்களில் முறையே 63 மற்றும் 307 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா அளித்த வெகுமதி
2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா அகிலை ஒரு பயங்கரவாதியாக அறிவித்தது மற்றும் நீதித்துறை இணையதளம் அவர் ஹிஸ்புல்லாவின் மிக உயர்ந்த இராணுவ அமைப்பான ஜிஹாத் கவுன்சிலில் பணியாற்றுவதாகக் தெரிவித்தது.

அவர் தொடர்பான தகவல்களை அளிப்பவர்களுக்கு $7m (£5.2m) வெகுமதி அளிப்பதாக கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.
இதனிடையே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டதுடன் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் எட்டுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.






Source: https://ibctamil.com/article/hezbollah-commander-killed-in-israeli-strike-1726851129

