பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு குறித்த பயணக் கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு நீண்ட காலமாகியும் குறித்த கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/nationwide-village-officials-hold-a-two-day-labor-union-action-1786257845

