சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.
சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக பேராசிரியர் ஞானசுந்தர வழங்கிய நிபுணத்துவ அறிக்கை குறித்து கலந்துரையாடுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான முறையான செயல் திட்டத்தை வகுப்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
இதற்கமைய, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் மற்றும் மோதல்களுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து தவறினால், இவ்விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என மனித உரிமைகள் ஆர்வலர் நிமல் புஞ்சிஹேவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

