தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாகக் கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று (09) மாலை 7.00 மணியளவில் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறந்து விடப்பட்டுள்ளன.
இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் செயல்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த வான்கதவுகள் வழியே வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் வேகத்தில் உபரி நீர் கொத்மலை ஓயாவிற்குள் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகக் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் சற்று உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றைப் பயன்படுத்துவோர் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

