முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று காலை திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், மீனவர்களை சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
மேலும், கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.



