கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப மகாரத தேர் உற்சவம் இன்று (11) காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட சிறப்புமிக்க இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதத்தைக் கொண்ட ஆலயமாக சிறப்புப் பெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, சுவாமி வீதியுலா இடம்பெற்றது.
இதனையடுத்து வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, விசேட பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் வடம் பிடித்து இழுக்க தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தத் தேர் உற்சவத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது நாட்டியாஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையையும், பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக் கேணியைக் கொண்ட சிறப்பையும் மாமாங்கேஸ்வரர் ஆலயம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை (12) நண்பகல் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.





