இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிப்பதற்காக இன்று (11) கொழும்பை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, அரசு உயர் அதிகாரிகளும் சீனத் தூதரகப் பிரதிநிதிகளும் உற்சாகமாக வரவேற்றனர்.
தனது வருகையின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங், இலங்கைக்கான தூதுவராகச் சேவையாற்றுவது தமக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும் எனக் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் செழுமையான வரலாறு, இயற்கை எழில் கொஞ்சும் சூழல் மற்றும் மக்களின் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை அவர் பெரிதும் பாராட்டிப் பேசினார்
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கடல்சார் மற்றும் கலாச்சார உறவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க “இறப்பர் – அரிசி ஒப்பந்தம்” மற்றும் முறையான ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டது முதல் தொடர்ந்து வரும் நம்பிக்கையான நட்புறவை நினைவு கூர்ந்தார்.
எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லத் தீவிரமாக உழைக்கப்போவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.

