யாழ் ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரனின் புகழுடலுக்கு யாழ் ஊடக அமையத்தில் நேற்று (11) இரவு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் தலைவராகவும், யாழ் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளராகவும் பணியாற்றிய ஆறுமுகம் சபேஸ்வரன், உடல்நலக் குறைவு காரணமாக கனடாவில் தனது 47ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்.
அவரது புகழுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்று இரவு யாழ் ஊடக அமையத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகத்துறையினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அன்னாரது புகழுடல் இன்று (12) கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை (13) இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதுடன், தகனக் கிரியைகளுக்காக அவரது புகழுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
Source: https://samugammedia.com/tears-of-tribute-to-sabeswaran-at-the-jaffna-media-center-1786508867

