கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (12) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேறு பகுதியைச் சேர்ந்த மணல் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.



