காணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை நான்காவது நாளாகவும் தொடர்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அங்குலான பகுதிக்கு அப்பால் வழக்கமான ரோந்துப் பணியை நிறைவு செய்து திரும்பிக் கொண்டிருந்த கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு, கடந்த 15ஆம் திகதி காலை சுமார் 11.40 மணியளவில் எதிர்பாராத கடல்சார் அவசரநிலையை எதிர்கொண்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்குலான பொலிஸார் மற்றும் அப்பகுதி மீனவ சமூகத்தினரின் உதவியுடன் படகில் இருந்த 12 பேரில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
காணாமல் போன கடற்படை அதிகாரியைத் தேடுவதற்கும், படகை மீட்பதற்கும், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கும் இலங்கை விமானப்படையுடன் இணைந்து கடற்படையினர் சிறப்பு வளங்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
16ஆம் திகதி அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் பின்னர், கடற்படை மூழ்காளர்களால் குறித்த படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
எனினும், கடந்த சில நாட்களாக நிலவும் கொந்தளிப்பான கடல் நிலைமையால், படகை கரைக்கு இழுத்து வரும் நடவடிக்கைகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட கடற்படை வீரர்களிடம் பெறப்பட்ட ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில், கடலில் மூழ்கியிருந்த கப்பல் சிதைவொன்றுடன் படகு மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/the-search-for-the-missing-malumi-continues-into-the-fourth-day-1787036247

