தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, நேரடியாக சூரிய ஒளிக்கு ஆளாவதால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (19) நடைபெற்ற எல் நினோ நிலைமை தொடர்பான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதிக வெப்பமான காலநிலை காரணமாக தோலில் தடிப்புகள், தசைப்பிடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், அதிக வெப்பத்திற்கு உட்படுவதால் உயிரிழப்புகள்கூட ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்தார்.
சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா நோய்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று, வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களும் கடுமையான வெப்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும் என அவர் தெரிவித்தார்.
வெப்பத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, நண்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் கடுமையான வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், மென்மையான நிறமுடைய ஆடைகளை அணிதல், தலைப்பகுதியை மூடுதல் மற்றும் சருமப் பாதுகாப்புக்கான தரமான பூச்சுகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை அருந்துவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், ஆறவைத்த நீர் என்பது குளிரூட்டப்பட்ட நீர் அல்ல என்றும் விளக்கமளித்தார்.
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உரிய அளவில் தவறாமல் உட்கொள்வதும் மிகவும் முக்கியம் என வைத்தியர் இனோகா சுரவீர தெரிவித்தார்.
இதேவேளை, எல் நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நிர்வகிப்பதற்காக சுகாதார அமைச்சு அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தொப்பி அல்லது குடைகளைப் பயன்படுத்துவதுடன், தேவையற்ற வகையில் திறந்தவெளியில் விளையாடுவதைத் தவிர்த்து, முடிந்தவரை நிழலான இடங்களில் நடமாடுவது முக்கியம் எனவும் வைத்தியர் அறிவுறுத்தினார்.
Source: https://samugammedia.com/deaths-can-occur-due-to-extreme-heat-health-ministry-warning-1787135225

