யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற ஆலயத் திருவிழாவின்போது அதிகளவில் வெடிகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிகள் பயன்படுத்தப்பட்டமையால், கண் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற திருவிழா உற்சவத்தின்போது அதிகளவில் வானவேடிக்கைகள் கொளுத்தப்பட்டதுடன், ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வின்போது அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
நிலைமையை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வித பதற்றமும் இன்றி பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும் நபர்கள் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று குறித்த ஆலயத்துக்குச் சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை செய்துகொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் அறிவுறுத்தியுள்ளனர்.

