தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ஊடாக ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் எவ்வித சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இணையவழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையவழி ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்பு ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சி வழங்கவும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தரமானதும் பாதுகாப்பானதுமான வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான ஒழுங்குமுறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

