மத்திய மலைநாட்டின் பிரதான நகரமான நுவரெலியாவில், பிரதான பாடசாலை பகுதியில் அமைந்துள்ள பொதுக் கழிப்பறை தற்போது மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கழிப்பறை நீண்டகாலமாக உரிய முறையில் சுத்திகரிக்கப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருப்பதாகவும், இதன் நிலைமை குறித்து சம்பந்தப்பட்ட நுவரெலியா நகர சபை உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால், அதன் ஊடாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நுவரெலியா நகரின் முக்கிய பகுதியில் இந்த கழிப்பறை அமைந்துள்ளது.
எனவே, குறித்த கழிப்பறையை உடனடியாக சுத்தம் செய்து, தேவையான திருத்தப் பணிகளை மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

