வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி மக்கள் இன்று (11.09.2026) ஒன்றுதிரண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சென்று குறித்த மகஜரை கையளித்தனர்.
இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க தரப்பினால் இம்மாத இறுதிக்குள் சில காணிகள் விடுவிக்கப்படும் என தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், உண்மையில் எந்தெந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை எழுத்து மூலம் வழங்குமாறும் மக்கள் கோரியுள்ளனர்.
மயிலிட்டி மக்களின் நில மீட்புப் போராட்டம் இன்று (11.09.2026) 21 வாரங்களை கடந்துள்ள போதிலும், இதுவரை காணி விடுவிப்பு தொடர்பில் உறுதியான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் பிரதேச செயலக மட்டத்தில் வெளியிடப்படவில்லை என போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்க தரப்பிலிருந்தும், பல்வேறு ஊடக செய்திகள் வாயிலாகவும், கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரின் கருத்துக்கள் வாயிலாகவும், “இம்மாத இறுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும்” என்ற தகவல்கள் மாதந்தோறும் வெளியாகி வருகின்றன.
எனினும், எந்தப் பகுதிகள், எத்தனை ஏக்கர் காணிகள் அல்லது எத்தனை குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் இதுவரை தமக்கு தெளிவான எழுத்துமூல தகவல் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல வாரங்களாக வீதியில் இறங்கி தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராடிவரும் நிலையில், வெறும் அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகளை தாண்டி நடைமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு, விடுவிக்கப்படவுள்ள காணிகளின் விபரங்கள் மற்றும் அதற்கான காலவரையறை உள்ளிட்ட விடயங்களை எழுத்து மூலமாகத் தெரியப்படுத்துவதுடன், தமது பிரதிநிதிகளை மீண்டும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

