இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, இந்த வாரத்தை ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில்,
நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பு இருண்ட எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் மௌனப் போக்குக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போராட்டத்தின் முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் பிரதான நுழைவாயில்களிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றுவதுடன், பல்கலைக்கழக வளாகங்களைச் சுற்றிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்படவுள்ளன.
மேலும், புதன்கிழமையன்று அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
இதன் பின்னரும் அரசாங்கத்திடமிருந்து உரிய தீர்வு கிடைக்காவிட்டால், பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளுக்கு பல்கலைக்கழகக் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழிற்சங்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், பல்வேறு முன்மொழிவுகள் மற்றும் உடன்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இதன் காரணமாக பல்கலைக்கழகக் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டு வருவதாகவும், குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காகக் காத்திருக்கும் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால், பல ஆண்டுகளாக தமது பிள்ளைகளின் உயர்கல்வியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
எனினும், வெறும் வாக்குறுதிகளை வழங்கும் பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

