கட்டுநாயக்க – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சமையற்கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க பகுதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் நேற்று (16) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குருநாகல், போயகனை, இசுருபெதேச பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் குறித்த உணவகத்தில் சமையல் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (15) இரவு பணியை நிறைவு செய்த பின்னர், அவர் உணவகத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள தனது அறையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இவர் மற்றொரு ஊழியருடன் இணைந்து மதுஅருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு முற்றியதில், மேல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/conflict-among-employees-chef-falls-to-death-from-upper-floor-1789620090

