சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines) 2022/2023 நிதியாண்டில் 73.3 பில்லியன் ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எவ்வாறாயினும், 2021/2022 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 22/23ஆம் நிதியாண்டில் சிறிலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் 56 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிதியமைச்சகத்தினால் (Ministry of Finance) வெளியிடப்பட்ட சமீபத்திய வரவு செலவுத் திட்ட நிலை அறிக்கையிலேயே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பில்லியன் ரூபாய் வருமானம்
2022/2023 நிதியாண்டில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) 372.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இந்தநிலையில், அமைச்சரவையின் ஒப்புதலுடன், விமான நிறுவனம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 102.5 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்துவதற்குத் தேவையான நிதி, பொது திறைசேரியிலிருந்து விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை விமான நிறுவனத்தை நிதி ரீதியாக, நிலையானதாக மாற்றும் வகையில், புதிய முதலீட்டாளர்களை உள்வாங்க, அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி
இதேவேளை, சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் விமானப் பயணிகளின் வருமானம் 293.3 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்தியா (India), பிரித்தானியா (Britain), சீனா (China) மற்றும் அவுஸ்திரேலியா (Australia) உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை (Sri Lanka) வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 21,298 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/announcement-from-sri-lankan-airlines-1720315155

