வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான
கலந்துரையாடல் இன்று(29) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற
சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான
இடர்பாடுகள் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக துறை சார்ந்த
நிபுணர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
முன்பள்ளி அபிவிருத்தி
வட மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் வரவு பாடரீதியாக மாணவர்கள் எதிர் நோக்கும்
பிரச்சினை மற்றும் முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விரிவாக
கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக முன் பள்ளிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதேச ரீதியாக
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேச
சபையினருடன் கலந்துரையாடி மாதிரி முன்பள்ளி ஒன்றினை நிபுணத்துவத்துடன் பயிற்சி
வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட வேண்டிய நிலை
நகர்புற பாடசாலைகளுக்கு மாணவர்கள் அதிகம் செல்வதால் கிராமப்புற பாடசாலைகள்
மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பதற்கு நகர்
புற பாடசாலைகளில் வகுப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை மட்டுப்படுத்துவதற்கு
உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வட மாகாண கல்வி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாற்றப்பட
வேண்டிய விடயங்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் எதிர்வரும் வாரங்களில்
சந்திப்பதாக குறித்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் சொன்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்
ராஜா, வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, வவுனியா பல்கலைக்கழக
வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், வட மாகாண முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர்களான
உதயகுமார் மற்றும் ஜோன் குயின்ரஸ், எந்திரி சூரியசேகரம் கல்வி ஆலோசனைக் குழு
உறுப்பினர் சச்சிதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




