கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) தோல்வியடைய செய்ய கடந்த காலங்களில் வடக்கு வாழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (05) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், “தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தெற்கிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்குமான தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
யாழ் மக்களின் ஆதரவு
மக்களை ஏமாற்றும் அரசியல் கலாச்சாரத்தை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்.

இந்த நிலையில், மாற்றத்துக்காக போராடும் தேசிய மக்கள் சக்தியுடன் யாழ் மக்கள் இணைய வேண்டும், அல்லது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வாக்களித்து பழைய கலாச்சாரத்தையே பின்பற்ற போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
மேலும், இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு எதிராக எமது ஆட்சியின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் மக்களின் தீர்மானம்
அத்துடன், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
எமது ஆட்சியின் போது போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்.

இவ்வாறாக தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆட்சி முறையை ஆதரிக்க வடக்கு வாழ் மக்கள் முன்வர வேண்டும்.
மாற்றத்தை எதிர்ப்பதா ஆதரிப்பதா எனும் தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.
புதிய பாதையில் பயணிக்க மக்கள் முன்வர வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும். ” என்றார்.
Source: https://ibctamil.com/article/failed-attempt-by-the-people-of-the-north-anura-1725547405

