கொவிட் தொற்று காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் வலு கட்டாயமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் அதற்காக மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உடற்தகன முறை
கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்டவாறு, வைரசு தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கான பொறிமுறையாக உடற்தகன முறை விதந்துரைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் பூதவுடல்கள் தகனஞ் செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் 2021 பெப்ரவரி மாதத்தில் அவ்வாறான நபர்களுக்கு மிகவும் மட்டுப்பாடுகளுடன் கூடிய நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.
வைரசை அடையாளம் காண்பதற்கான ஆய்வு
2021 யூலை மாதத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அப்போதிருந்த நீர் வழங்கல் அமைச்சால் ஆற்றுநீர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்தநீர் உள்ளிட்ட கொழும்பு கண்டி நீரியல் பிரதேசங்களில் SARS –CoV-2 வைரசை அடையாளம் காண்பதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ஆய்வின் பிரகாரம் மேற்புற நீரில் எவ்வித வைரசும் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரும் இலங்கை அரசு
2024 மார்ச் மாதத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் நீர் தொழிநுட்பத்திற்கான சீனா – இலங்கை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையத்தின் மூலம் இரண்டாவது கற்கையும் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அதன்மூலம் SARS –CoV-2 வைரசு நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல்வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாக மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய உடற்தகனக் கொள்கையால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோருவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Source: https://ibctamil.com/article/government-to-apologize-publicly-to-muslims-1721726658

