அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு உலங்கு வானூர்திகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்தடைந்துள்ளன.
இந்த உலங்கு வானூர்திகளின் வருகையானது, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது
என்றும், இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சித் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க பங்களிப்பாகும் என்றும் இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இரத்மலான இலங்கை விமானப்படைத் தளத்தில் உலங்கு வானூர்திகள்
இந்த உலங்கு வானூர்திகள் தற்போது இரத்மலான இலங்கை விமானப்படைத் தளத்தில் உள்ளமைவு மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த விமானங்கள் சேவையில் சேர்க்கப்பட்டு, செயல்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

இந்த TH-57 ரக உலங்கு வானூர்திகள், விமானப்படையின் விமானப் பயிற்சித் திறனை கணிசமாக வலுப்படுத்துவதோடு, பரந்த அளவிலான தேசியத் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் அதன் திறனையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அது கூறியது.
விமானி பயிற்சி, மனிதாபிமான உதவி
இந்த வானூர்தியானது முதன்மையாக விமானி பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு (HADR) நடவடிக்கைகள், தேடுதல் மற்றும் மீட்பு (SAR) பணிகள் மற்றும் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படும் பிற பொதுச் சேவைப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும்.


