சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வலியுறுத்தியுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து வெளியிடும் போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒரு சிறுமிக்கு தற்கொலை செய்வது என்ற எண்ணம் வருவது, ஒரு சமூகமாக நாம் அனைவரும் தோல்வியடைந்த ஒரு தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகள்
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்றும், கொட்டாஞ்சேனை சிறுமி சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, குழந்தைகள் குற்றங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

