இலங்கையில், ஜப்பான் நிறுவனங்கள், ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம்
இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும்
ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த விவாதத்தின்
போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தூதர் இந்தக் கருத்துக்களை
வெளியிட்டார்.
முன்னதாக, சில ஜப்பானிய நிறுவனங்கள், இலங்கையில் முதலீடுகளைப் பெறுவதில்
சிக்கல்களை எதிர்கொள்வதாக செய்திகள் வந்தன.
ஊழல் எதிர்ப்பு கொள்கை
ஜப்பானிய நிறுவனங்கள் இணக்கக் கடமைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றன. அவை ஒருபோதும் இலஞ்சம் அல்லது கையூட்டுகளை வழங்குவதில்லை.

எனவே, இந்த விடயத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஊழல் எதிர்ப்பு
கொள்கைகளை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஜப்பானிய தூதர்
வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் உள்ள அரசியல்வாதிகள் எந்த வகையான ஊழலிலும் ஈடுபடவில்லை
என்ற ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளித்த அவர், அரச அதிகாரிகள் மட்டத்திலும்
அதே பிரச்சினையை நிவர்த்திக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

