கச்சத்தீவு விவகாரம் மீண்டும் களத்துக்கு வந்திருப்பது முற்றுமுழுதாக அரசியலுக்காக பேசப்படும் விடயம் என தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு, பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்துதல் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் மூலமே முன்னெடுக்கப்பட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விடயங்களில் முற்போக்கான நிலைமை ஏற்படுமா என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
அரசியலுக்காக பேசுகிறார்கள்
அதுமாத்திரமன்றி, இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயற்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கலாசார தொடர்புகளின் அடிப்படையில் இதனை முன்னெடுக்கலாம்.

அடுத்து கச்சத்தீவு விடயத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவு எடுக்கப்பட்டது, அந்த விடயம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை. தற்போது இதை அரசியலுக்காக பேசுகிறார்கள். கவனச்சிதறல் முயற்சியாகவே இது தெரிகிறது.
தெளிவான முடிவு
இதற்கிடையே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பாலம் அமைப்பது குறித்து பரவலாக பேசப்படுகிறது, ஆனால் அதன் சாத்தியம் குறித்து தெளிவான முடிவு எடுப்பது சற்றுக் கடினமாக உள்ளது,

உலகளவில் இதை விட நீளமான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பாலத்தால் ஏற்படப்போகும் பொருளாதார விளைவுகள் என்ன, செலவு என்ன என்பது முக்கியமான விடயமாகும்.
அது மாத்திரமன்றி பாதுகாப்பு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும். பொறியியல் மற்றும் கட்டடக்கலை அடிப்படையில் பார்த்தால் பாலம் அமைப்பது சாத்தியமானதுதான்.” என்றார்.
Source: https://ibctamil.com/article/katchatheevu-issue-for-politics-to-india-srilanka-1714549065

