சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது மிகவும் குறைந்த அளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகளை கூலி
இதனடிப்படையில், இலங்கையின் சட்டத்தின்படி,16 வயதுக்குட்பட்ட எவரையும் பணியில் அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கூலி வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக கடந்த ஆண்டு 186 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் சிறுவர்களை கூலி வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் 56 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் தொழிலாளர் துறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சிறுவர் உரிமை மீறல் குறித்து 24 மணி நேர தொலைபேசி எண்ணான 1929 இற்கு முறைப்பாடு செய்யலாம் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.