சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த புதிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பணியகத்தின் தலைவர் ஆனந்த லால் ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், துபாயில் விமான நிலைய நிர்மாணத் திட்டங்களில் 2,000 வேலைவாய்ப்புகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேற்பார்வையாளர் பணியிடங்கள்
அதிகபட்சமாக ரூ.150,000 செலவில் விண்ணப்பதாரர்கள் விரைவாக வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 800 மேற்பார்வையாளர் பணியிடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதற்கான மொத்த செலவு ரூ.180,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகைகள் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இலங்கையில் பட்டம் பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பூஜ்ஜியச் செலவில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நலவாழ்வு மையம் இந்த வேலைவாய்ப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் புதிய வேலைவாய்ப்புகள்
ஜப்பானில் மூன்று நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
முன்னோடித் திட்டத்தின் கீழ், ஜப்பானிய நிர்மாண நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தையில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
ஜப்பானிய மொழித் திறன்
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சிக்கான செலவுகளை குறித்த ஜப்பானிய நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானிய நிறுவனமான Meta Techno உடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடிப்படை ஜப்பானிய மொழித் திறன் கொண்ட ICT பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மற்றொரு ஜப்பானிய நிறுவனம் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்காக 1,000 லொறி சாரதி பணியிடங்களை வழங்க முன்வந்துள்ளது.
இதற்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் ஜப்பானிய மொழித் திறனும் அவசியமாகும்.
தேவையான தகுதிகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, அவற்றைப் பெற்றுக்கொள்ள உதவிகளை நிறுவனம் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்(https://www.slbfe.lk/) மற்றும் Facebook பக்கம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
Source: https://ibctamil.com/article/new-job-opportunities-in-japan-and-the-middle-east-1788420245

