இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வலைதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலி சப்ரி, தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக IMF தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவில் IMF-ன் பிராந்திய இயக்குநர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அலி சப்ரி, இலங்கை தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலி சப்ரிக்கு கிடைத்த வாய்ப்பு
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஆகியோரை சந்திக்க அலி சப்ரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதிய உணவு அருந்தியதாக அவர் கூறியுள்ளார்
இது குறித்த மேலும் கருத்து வெளியிட்ட அலி சப்ரி,
“அவர் என்னிடம் ‘அமைச்சரே, சந்திப்பு எப்படி நடந்தது?’ என்று கேட்டார். நான், ‘அவ்வளவு சிறப்பாக இல்லை என பதில் வழங்கினேன்.
அவர்கள் தயக்கத்துடன் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றேன்.
அதற்கு நிர்மலா சீதாராமன், “கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்திக்கிறேன். நான் இலங்கை குறித்து அவரிடம் பேசுகிறேன்” என்றார்.
IMF தலைமைத்துவம்
அதன்பின்னர் IMF தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.
IMF நிர்வாக இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, அது எனக்கு மிகவும் முக்கியமான சந்திப்பாக இருந்தது.
ஆனால் அப்போது அவர்களின் தொனி, அணுகுமுறை, சூழல் என அனைத்துமே மாறியிருந்தன.
அப்போது கிறிஸ்டலினா ஜார்ஜீவா, தாம் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல.
இலங்கையைப் பற்றியே இருந்தது என்றும் தன்னிடம் தெரிவித்தார்” என்றார்.
Source: https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071

