புதிய திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு
செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும்
அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது
பிரதான நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபு தெரிவித்துள்ளார்.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு குழுக் கூட்டம் இன்று (02.06.2025) வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர்
கூட்டத்தில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தை ஆரம்பித்து வைத்து
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இந்த நாட்டில்
ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்து இருக்கின்ற இந்த நிலையில் மட்டக்களப்பு
மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குரிய முதலாவது அபிவிருத்தி குழு
கூட்டம்தான் தற்போது நடைபெறுகின்றது.
தீர்க்கமான தீர்மானங்கள்
இதன்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில்
கலந்துரையாடி சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்க்கமான
தீர்மானங்களை நிறைவேற்றி அபிவிருத்தியில் வெற்றி காணவேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை இக்கூட்டத்தின் வாயிலாக
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பும். தேசிய மக்கள்
சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட
வேண்டும்.
அது போன்று எங்களால் முன்னெடுக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் சரியான
முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான
முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக்
கொடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும்.
இந்த வகையில் பிரதேசத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகள் மாவட்டத்தில்
இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ள வேண்டும். அன்னக்காலமாக
நாம் கிளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்நகர்த்திக்
கொண்டிருக்கின்றோம்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
மக்களிடையே சிறந்த பண்புகளை உருவாக்குவது போன்று
பிரதேசங்களையும் சுத்தம் செய்து துப்புரவு செய்து கிளீன் ஸ்ரீலங்கா
வேலைத்திட்டத்தின் ஊடாக தன்னை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அது மாத்திரம் இன்றி அரச அதிகாரிகளின் மனங்களிலும் மாற்றங்கள் உருவாக
வேண்டும். மக்கள் சேவைகளை தேடி உங்களிடம் நாடும் போது இந்த சேவைகளை செயல்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும். அந்த கடமைகளையும் அரசு
அதிகாரிகள் சரிவர செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.
அது போன்று புதிய பல விடயங்களையும் இது அரசாங்கத்தின் ஊடாக செயல்படுத்திக்
கொண்டிருக்கின்றோம். அதற்கும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் மிக
அவசியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை, வன இலாகா, உள்ளிட்ட பல
விடையதானங்களில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்
அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன்,
இ.சிறிநாத், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும்
திணைக்களங்களினதும், அதிகார சபைகளினதும் தலைவர்கள் பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

