மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள
உப்பாற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்றைய தினம் (04.05.2024) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று (04) மதியம் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின்
வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கியதையடுத்து அதனை
கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ்
தடவியல் பிரிவினர் விசாரணையில் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்
ஒருவரின் மண்டை ஒடு என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்கு சென்று மண்டை
ஓட்டை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு எலும்புகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத
பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதேவேளை மீட்கப்பட்ட மண்டை ஓடு கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காணாமல்
போயுள்ள மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனான பழைய பனிச்சையடியைச் சேர்ந்த
செல்வராசா நிதுஷன் என்பவரது மண்டை ஓடு என அவரது உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை மீட்கப்பட்ட மண்டை ஓடு மற்றும் எலும்புகள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார்
கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/recovery-skull-bones-at-satturu-kondan-batticaloa-1714857459

