கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியர்
ருவைஸ் ஹனிபா களமிறங்குகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரப் பகுதியில் வசிப்பவர்களின் தொலைநோக்குப் பார்வையை
நிறைவேற்றக்கூடிய தலைவராக வைத்தியர் ஹனிபா இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றார்
என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
மருத்துவ நிபுணரான ஹனிபா, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ
ஜயவர்தனபுரவிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.
இலவசக் கல்வி
இலவசக் கல்வியை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, களனி மற்றும்
கொழும்பு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் தற்போது விரிவுரை செய்யும்
ஒரு கல்வியாளரும் ஆவார்.

மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் குடும்ப சுகாதார
பிரிவை நிறுவிய நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகின்றார்.
மேம்பட்ட உட்கட்டமைப்பு, வீட்டுவசதி தீர்வுகள் மற்றும் புதிய வருமானம் ஈட்டும்
வழிகளைக் கொண்ட ஒரு வளமான மற்றும் நவீன நகரத்தை உருவாக்குவதே கொழும்புக்கான
ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்குப் பார்வை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
ஹனிபா ஊழல் இல்லாத புதிய முகத்தையும் புதிய தலைமையையும்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். தலைநகரில் நிலையான வளர்ச்சியை
முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும்
தெரிவித்தார்.

