வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது .
இன்று நண்பகல் 12 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணில் அதிர அம்மனுக்கு கொடியேற்றம் பக்திபூர்வமாக நடைபெற்றது.
இதேவேளை நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக மாவட்ட செயலகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 ஆம் திகதி
மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட
பின்வரும் விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்
பொதுமக்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார்.

படகுச் சேவை
குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது 26.06.2025 ஆந் திகதி
தொடக்கம் 11.07.2025 ஆந் திகதி வரை மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை
அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும்.
பேருந்து சேவை
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தானது யாழ்.பேருந்து
தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச் சேவைக்கமைய
சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையிலும்
சேவையில் ஈடுபடும்.
திருவிழா காலங்களில் பேருந்து 4.30 மணிக்கு பேருந்து
தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச்
சேவைக்கமைய சேவையில் ஈடுபடும்.
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும்
வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அடியார்கள்
மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில்
தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
24.06.2025 ஆந் திகதி தொடக்கம் 12.07.2025 ஆந் திகதி வரை
குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு கட்டட பொருட்கள் வங்களாவடி
இறங்குதுறைக்கு கொண்டு செல்லப்படலாம். குறிகட்டுவானிலிருந்து பி.ப 2.00
மணிக்கு பின்னர் கட்டடப்பொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படுவதுடன் இறுதி
04 திருவிழா காலங்களில் கட்டடப்பொருட்கள் எடுத்துச்செல்வது முற்றாக
தடைசெய்யப்பட்டுள்ளது.
அன்னதானம்
அடியார்களுக்கான மதிய மற்றும் இரவு உணவானது அமுதசுரபி அன்னதான சபையினரால்
திருவிழா நாட்களில் வழங்கப்படும்.
பாதுகாப்பு ஏற்பாடு
காவல்துறையினர் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள். மேலும்
பொதுமக்கள், அடியார்கள் தங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்கு அவர்களே
பொறுப்பாளிகள் ஆவர்.
தண்ணீர்ப்பந்தல்
ஆலய வளாகத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்க விரும்பும் அடியார்கள் மற்றும்
பொதுநலன்விரும்பிகள் பொது சுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு அனுமதியினைப்
பெற்றுக்கொள்ளவும்.
திருவிழா காலங்களில் ஆலய வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையினை
முற்றாக தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட்டு பொருத்தமான இட
ஒதுக்கீடு செய்யப்படும்.


















