சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இவ்வாண்டுக்கான வரவு – செலவுத்
திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், மாறாக நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான
பிரச்சினைக்கும் அதில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்..
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள்
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த
அவர், மேலும் குறிப்பிடுகையில்,
“வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே நாம் வாக்களித்தோம். அதிலுள்ள
வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானதா என்பது
சந்தேகத்துக்கிடமானது.
வரி வருமானம்
வரி வருமானம் மற்றும் கடன் பெறுவதைத் தவிர அரசிடம் வேறு எந்த
மாற்றுத்திட்டமும் இல்லை.

தொழில் வாய்ப்பின்மை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு
பிரதான பிரச்சினைக்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு
முன்வைக்கப்படவில்லை.
மாறாக முற்று முழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இந்த வரவு –
செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அரச நிர்வாகம் தொடர்பில் அரசு
இன்னும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அரசிலுள்ள அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்துக்குள் பொய் கூறும் உரிமை நீக்கப்பட
வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக இதற்கான யோசனையையும் முன்வைப்பதற்கும்
நாம் தயாராக இருக்கின்றோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிக
வேகமாகப் பலமடைந்து வருகின்றது.

கடந்த காலங்களில் எம்மிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் கட்சியில்
இணைகின்றனர். நாம் மக்களிடம் பொய் கூறி அவர்களை ஏமாற்றவில்லை.
நாம் ஒரே கொள்கையைப் பின்பற்றி வருகின்றோம். சந்தர்ப்பவாத அரசியலுக்காக நாம்
எமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை.
கட்சி ஆதரவாளர்கள் தற்போது அதைப்
புரிந்துகொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக மீண்டும் கட்சியை உயர் நிலைக்குக் கொண்டு
செல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” என்றார்.

