தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் நடத்துவதாக கூறியவர்களுக்கு இன்று என்ன நடந்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏனையவர்களுக்கு தங்களால் பாடம் நடத்த முடியும் எனவும் தேர்தல் காலத்தில் மார் தட்டிக் கொண்டவர்களுக்கு இன்று என்ன நடந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கு விசாரணை
நீதிமன்றில் வழக்கு விசாரணையை செய்யும் இடத்தில் இதுவரையில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஓர் முன்னாள் படை அதிகாரி என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர் போர் நடந்த காலத்தில் விரல் ஒன்றில் ஏற்பட்ட காயத்தை காரணம் காட்டி கொழும்பு திரும்பியதாகவும் போர் முடிவடையும் வரையில் அவர் மீண்டும் போர்க்களத்திற்கு செல்லவில்லை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை தேடிப் பார்த்தபோது இந்த தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நபர்களே நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் பலர் வாய்ப்பேச்சு வீரர்கள் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு மிகவும் பொருத்தமானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் நீதிபதி தீர்ப்பு வழங்க முன்னாள் மூன்றாம் தரப்பினால் தீர்ப்பு வழங்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த பொலிஸ் மா அதிபரை பணி செய்ய முடியாத வகையில் நீதிமன்றின் ஊடாக முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.