இந்தியா(India) – கனடா(Canada) உறவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிளவுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மாத்திரமே பொறுப்பு என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் உள்ள மத்திய தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போதே ட்ரூடோ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய தூதர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பில் கனேடிய பிரதமரின் பதிலுக்கு இந்திய வெளியுறவுத் துறை,
“காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது.
இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக கூறிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எங்களிடம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
ஆகவே, கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் குறிவைத்து குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியா – கனடா விரிசல்
எனவே இந்தியா – கனடா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு” என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
இதேவேளை, கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.