புதிய இணைப்பு
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில், அனுமதியற்ற கார் கண்காட்சியில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றும் 14 பேர் காயமடைந்ததாக, முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லாஸ் குரூஸ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக லாஸ் குரூஸ் பொலிஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இரண்டு பேரும் 16 வயதுடைய ஒருவரும் கொல்லப்பட்டதாக லாஸ் க்ரூசஸ் பொலிஸார் முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம்…
அதேநேரம், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் பொலிஸார் பல தடயங்களை தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகின்றனர் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் தற்போதைய நிலை குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.


Source: https://tamilwin.com/article/us-new-mexico-mass-shooting-3-killed-14-injured-1742667759

