மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற தொனிப்பொருளிலான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, அம்பகமுவ பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது.
அம்பகமுவ பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவிராரச்சி மற்றும் அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் கபில நக்கந்தல ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
செப்டெம்பர் 14 முதல் 19ஆம் திகதி வரை ‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் முதல்நாள் ‘நடமாடும் சேவைகள் மற்றும் வருமான மேம்பாடு’ என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது.
ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து, அம்பகமுவ பிரதேச சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட வட்டவளை நகரில் வருமான மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இதனுடன் நடமாடும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டதுடன், ‘சிட்டி குரல்’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், அம்பகமுவ பிரதேச சபையில் அத்தியாவசிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளும் கோரப்பட்டன.
அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் கபில நக்கந்தலவின் வழிகாட்டுதலின் கீழ், உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அப்பகுதி மக்களின் நலனை இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, குடிநீர் திட்டங்களை ஆரம்பித்தல், மருத்துவ நிலையங்களை அமைத்தல், நடமாடும் சேவைகளை நடத்துதல், பொது வசதிகளை நவீனமயமாக்குதல், சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் குப்பை முகாமைத்துவத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், பாடல் மற்றும் இலக்கிய மாதத்தை முன்னிட்டு நடமாடும் நூலகம் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர், மதகுருமார்கள், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவிர, அம்பகமுவ பிரதேச சபைத் தலைவர் கபில நக்கந்தல, அம்பகமுவ பிரதேச செயலாளர் சாமில இந்திக ஜயசிங்க, உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திலினி மதுஷிக உள்ளிட்ட அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சுகாதார மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அதிபர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

